டெஸ்லா கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்வது தொடர்பாக இந்தியாவுக்கு பயணம் செய்ய திட்டமிட்ட எலான் மஸ்க், கடைசி நிமிடத்தில் தனது பயணத்தை ரத்து செய்து சீனாவுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில், தனது சீன பயணத்தின் போது தானியங்கி வாகனத்திற்கான மென்பொருளை அறிமுகம் செய்வது மற்றும் கடல்கடந்து தகவல்களை பரிமாற்றம் செய்வதற்கான அனுமதி பெறுவது தொடர்பாக சீன அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சீன பயணத்தின் போது எலான் மஸ்க் அந்நாட்டு பிரதமர் லி கியாங்கை நேரில் சந்தித்து டெஸ்லா நிறுவனம் குறித்து கலந்துரையாடியதாகவும் கூறப்படுகிறது.
டெஸ்லா நிறுவனத்தின் வளர்ச்சி
குறிப்பாக இந்த சந்திப்பின் போது சீனாவில் டெஸ்லா நிறுவனத்தின் வளர்ச்சி அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதுமாத்திரமன்றி இந்த சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் தொடர்பாக எலான் மஸ்க் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றினையும் இட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “பிரதமர் லி கியாங்கை சந்தித்ததில் பெருமை கொள்கிறேன். ஷாங்காய் நாட்கள் தொடங்கி பல ஆண்டுகளாக நாங்கள் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துள்ளோம்,” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்தப் பதிவில் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் இணைத்துள்ளார்.
Source: https://ibctamil.com/article/elon-musk-meets-chinese-pm-after-cancel-india-trip-1714385952

