நாட்டில் டெங்கு நோய்த்தாக்கத்தின் வீரியம் தற்போது ஒரு பாரிய தொற்றுநோய் மட்டத்திற்கு தீவிரமடைந்துள்ளதாக நிர்வாக சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, நாடளாவிய ரீதியில் இதுவரை அடையாளம் காணப்பட்டிருந்த 74 டெங்கு அதி அபாய வலயங்களின் எண்ணிக்கை, தற்போது 84 ஆக உயர்வடைந்துள்ளது.
தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலை காரணமாக பின்வரும் 14 மாவட்டங்களில் டெங்கு நோய் மிக அதிவேகமாகப் பரவி வருவதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை குருநாகல், புத்தளம், இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை, மட்டக்களப்பு, பதுளை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய் வேகமாக பரவி வருகின்றது.
தற்போதைய சூழ்நிலையில் பாடசாலை மாணவர்கள் இந்த டெங்கு வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகமாகக் காணப்படுவதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, பாடசாலை வளாகங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு பெற்றோர்களுக்கும் அதிபர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, வேகமாக பரவி வரும் டெங்குப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று (ஜூன் 15) ஆரம்பிக்கப்பட்ட தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தின் இரண்டாம் நாளான இன்றைய தினமும் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் 2வது நாள் நிகழ்வு மூதூரில் இன்று செவ்வாய்கிழமை (16) முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது மூதூர் நகரில் டெங்கு பரவும் வகையில் காணப்படும் பொது இடங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டன. அத்தோடு டெங்கு பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
மூதூர் பிரதேச சபை, பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பொலிஸ் நிலையம் ஆகியவற்றின் ஒன்றிணைந்த செயற்பாட்டின் மூலம் இவ் டெங்கு ஒழிப்பு பரிசோதனை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.




