சிறிலங்காவின் அதிபராக தான் பதவியேற்றால், நாட்டில் புதிய நாடாளுமன்றம் அமைக்கப்படும் என தாய்நாட்டு மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர (Dilith Jayaweera) தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் (Australia) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து உரையாற்றும் போதே, அவர் இதனை கூறியுள்ளார்.
அதேநேரம், எதிர்வரும் 27 ஆம் திகதி தனது அரசியல் பயணம் தொடர்பான திட்டத்தை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல்மிக்க ராஜபக்ச குடும்பத்தினர்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஊழல்மிக்க ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்பில் நான் தனிப்பட்ட ரீதியில் அறிந்திருந்தேன்.

எனினும், நாட்டின் அதிபராக தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) சிறந்த கல்வியறிவை கொண்டிருந்தார்.
இதனால் நான் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கியிருந்தேன். அவருக்காக தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தேன்.
பொறுப்பு
எனினும், மக்கள் எதிர்ப்பு காரணமாக அவர் பதவி விலகியுள்ள நிலையில், அவரால் ஏற்பட்ட இடைவெளியை பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.

இந்த காரணத்தால் எனக்கு பிடிக்காவிட்டாலும், அரசியலுக்குள் நுழைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில், எனது எதிர்கால திட்டங்களை எதிர்வரும் 27 ஆம் திகதி முன்வைப்பேன். இது தேர்தலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.



Source: https://ibctamil.com/article/dilith-will-establish-new-parliament-sl-politics-1718118992

