வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று (30) சபையின் உப தவிசாளர் தியாகராசா தயாபரன் தலைமையில் நடைபெற்றபோது, ஊடகவியலாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தொடர்பாக கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
ஊடகங்களின் செயற்பாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு நிபந்தனைகள் குறித்து தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதையடுத்து சபையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த வழிகாட்டுதல்களில், அடையாள அட்டை பதிவு இன்றி சபைக்குள் அனுமதியில்லை, உறுப்பினர்களுடன் அமர்வின்போது உரையாடக் கூடாது, தொலைபேசிகளை அமைதிநிலையில் வைத்திருக்க வேண்டும், ஒலி மற்றும் ஒளிப்பதிவுக்கு முன் அனுமதி பெற வேண்டும், ஒதுக்கப்பட்ட இடத்தைத் தவிர வேறு பகுதிகளில் நடமாடக் கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் இடம்பெற்றிருந்தன.
மேலும், தவிசாளர் உத்தரவிட்டால் உடனடியாக ஒலி, ஒளிப்பதிவை நிறுத்த வேண்டும், உறுப்பினர்களின் கௌரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான பதிவுகளை வெளியிடக் கூடாது, சபை அமர்வின்போது கேள்விகள் எழுப்பக் கூடாது என்பனவும் நிபந்தனைகளில் இடம்பெற்றிருந்தன.
குறிப்பாக, சபை அமர்வு நடைபெறும் வேளையில் ஊடகவியலாளர்கள் தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று ஒளிப்பதிவு செய்ய முடியாது என்ற நிபந்தனை தொடர்பாகவே தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டதையடுத்து கடுமையான வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டன.
சபை அமர்வு நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த உப தவிசாளர் தியாகராசா தயாபரன், சபையை குழப்பும் நோக்கில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக கூறி அவற்றை நிராகரித்தார்.
அதேவேளை, இன்றைய அமர்வில் ஊடகவியலாளர்களின் அங்கீகாரத்தை உறுதிப்படுத்தி, எதிர்கால சபை அமர்வுகளில் அவர்களுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்களுக்கு செயலாளர் மற்றும் தவிசாளர் தரப்பில் நீண்டகாலமாக அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

