எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஆதரவு குறித்து ராஜபக்ச இல்லாத புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் கடந்த 9ஆம் திகதி அரசாங்க, எதிர்க்கட்சி மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சமகி ஜன பலவேக ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.
இந்தக் கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தல்
வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்கும் அரசியல் மற்றும் ஊழலற்ற அரசாங்கத்தை உருவாக்குவதற்காக ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இரண்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

ராஜபக்ச இல்லாத கூட்டணியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவை பிரதிநிதித்துவப்படுத்தும் 60க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இணைய உள்ளதாக கலந்து கொண்ட எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், புதிய கூட்டணியின் அரசியலமைப்பை உருவாக்குவதற்கு மூன்று அரசியல் தலைவர்கள் இங்கு நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வாரத்திற்குள் அரசியலமைப்பு கூட்டணி உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு அரசியல் கட்சியுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: https://tamilwin.com/article/special-discussion-on-formation-political-alliance-1718150553

