கன்றுத்தாச்சி பசு ஒன்றை திருடி விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் சிவில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
150,000ரூபா பெறுமதியான பசு ஒன்று திருடப்பட்டமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, மாமடுவ பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
மேய்ச்சலிற்காக அப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் கட்டியிருந்த மாட்டை, சந்தேக நபர்கள் திருடியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன் இறைச்சிக்காக அப்பகுதியில் உள்ள இறைச்சிக் கடையொன்றிற்கு சந்தேக நபர்கள் அதனை விற்பனை செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட லொறி வண்டியும் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படடநிலையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

