நாட்டிலுள்ள பதிவு செய்யப்படாத அனைத்து முதியோர் இல்லங்களும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் கே. சதுர மிஹிதும் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில்,பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் குறித்த தகவல்களைச் சேகரிப்பதற்காக தற்போது நாடளாவிய ரீதியில் விசேட கணக்கெடுப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதுவரை தங்களது விபரங்களை வழங்காத முதியோர் இல்லங்களின் நடத்துனர்கள், செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள கூகுள் படிவத்தைப் பூர்த்தி செய்து விபரங்களை உடனடியாக வழங்க வேண்டும்.
அரசாங்கத்தினால் எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள விசேட திட்டங்களின் பலன்களைப் பெற்றுக்கொள்வதற்கு இந்த முதியோர் இல்லங்களின் பதிவு இன்றியமையாததாகும்.
நாடு முழுவதும் பதிவு செய்யப்படாமல் இயங்கி வரும் 311 முதியோர் இல்லங்கள் தற்போது அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு அறிவித்தல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
முறையான பதிவின்றி ஐந்துக்கும் மேற்பட்ட முதியோர்களைப் பராமரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

