கிழக்கு மாகாணத்தின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம், குறிப்பாக சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி வாய்ப்புகள் குறித்து ஆராயும் நோக்கில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் இன்று (11) மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயம் செய்தனர்.
மியன்மார், மலேசியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல், மட்டக்களப்பு பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
தூதுவர்கள் பாரம்பரிய மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன், கிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, மட்டக்களப்பு மாநகரசபை சார்பில் மாநகர எல்லைக்குள் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்கள், அவற்றை மேம்படுத்த தேவையான அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மாநகரசபையின் செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களுக்கு ஆசிய நாடுகளின் ஒத்துழைப்பும் உதவியும் வழங்குமாறு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் கோரிக்கை விடுத்தார்.
நிகழ்வின் நிறைவில், ஐந்து நாடுகளின் தூதுவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டதுடன், ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி அபிவிருத்தித் திட்ட முன்மொழிவு அறிக்கைகளும் கையளிக்கப்பட்டன.
மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாநகர ஆணையாளர் என். தனஞ்செயன், மாநகரசபை உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
Source: https://samugammedia.com/ambassadors-of-5-asian-countries-visit-batticaloa-1783753572

