சமூக ஊடகங்களில் கடும் விவாதத்திற்கு உள்ளாகி வரும், தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் காரின் அருகே சிறுவன் ஒருவன் நடந்து செல்லும் காணொளிக் காட்சி தொடர்பாக, பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களுக்கு அது தொடர்பான விளக்கம் ஒன்றை வழங்கியுள்ளது.
சிறுவன் தான் காருக்குத் தீ வைத்ததாகக் குறிப்பிட்டாலும், விசாரணையின் போது நேரில் பார்த்த சாட்சியோ அல்லது வேறு ஆதாரமோ எதுவும் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருநாகல் பொலிஸ் பிரிவுக்குச் சொந்தமான பாடசாலை வளாகத்திலேயே இந்தத் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரின் அறிக்கைகளின்படி, பாடசாலை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 14 லட்சம் ரூபா பெறுமதியான கார் ஒன்று, ஜூலை 3 ஆம் திகதி தீக்கிரையானது.
சுமார் 8 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் இந்தத் தீவைப்புக்குக் காரணம் என்று குருநாகல் பொலிஸ் நிலையத்தில் ஒரு புகாரும் செய்யப்பட்டிருந்தது.
புகாரின் பேரில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்ட குருநாகல் பொலிஸாருக்கு, அந்தக் காணொளிக் காட்சியில், அதே பாடசாலையில் கல்வி கற்கும் 8 வயது மாணவன் ஒருவன், அந்த காருக்கு அருகில் நடந்து செல்கின்றமை தெரியவந்தது.
இருப்பினும், சம்பந்தப்பட்ட சிறுவன் தான் காருக்குத் தீ வைத்தது என்பதை உறுதிப்படுத்த இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று பொலிஸார் கூறுகின்றனர்.
குருநாகல் பொலிஸார் இச்சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் ஏற்கனவே புகார் அளித்துள்ளதோடு, மேலும் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
காரில் ஏற்பட்ட தீ விபத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய, அரச தடவியல் நிபுணர்களின் விசாரணை அறிக்கைகளையும் பெறுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கப் பகுப்பாய்வாளர் அலுவலகமும் எடுத்துள்ளது.
எனவே, அதிகாரப்பூர்வ விசாரணைகள் முடிவடையும் முன், சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என பொலிஸ் ளஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

