வத்தளை – கதிரான பள்ளியாவத்த பகுதியில் நேற்று (23) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
மண்டபம் ஒன்றில் இடம்பெற்ற பிறந்தநாள் விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்டிருந்த நபர் ஒருவரை இலக்காகக் கொண்டு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய போதைப்பொருள் வர்த்தகராகக் கருதப்படும் “மட்டக்குளிய குடு ரொஷான்” என அழைக்கப்படும் நபரே துப்பாக்கிச் சூட்டின் இலக்காக இருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ரொஷானின் சகோதரரின் பிள்ளையின் பிறந்தநாள் நிகழ்வின் போது, நேற்று இரவு சுமார் 9.40 மணியளவில் காரில் வந்த மர்ம நபர் ஒருவர் தலைக்கவசம் அணிந்த நிலையில் மண்டபத்திற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார்.
எனினும், துப்பாக்கிச் சூடு இலக்கை தவறியதால், ரொஷானுக்கு அருகில் இருந்த நபர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பொரளை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கைத்துப்பாக்கி வகையைச் சேர்ந்த ஆயுதம் ஒன்றைப் பயன்படுத்தியே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

