புத்தளம் – மாரவில, மூதுகட்டுவ கடற்கரைப் பகுதியில் கடலில் நீராடிக் கொண்டிருந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவர் கடல் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை (22) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வென்னப்புவ – நைனாமடம பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஐந்து இளைஞர்கள் விடுமுறையைக் கழிப்பதற்காக மாரவில கடற்கரைக்கு சென்றுள்ளனர்.
அவர்கள் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட பலத்த அலையில் இரு இளைஞர்கள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, அப்பகுதி மக்கள் உடனடியாக கடலில் இறங்கி, ஒருவரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
எனினும், தொடாங்கொட – யக்கலமுல்ல பகுதியைச் சேர்ந்த எதிரிசூரிய கமகே பெதும் தெநெத் அசோக என்ற 18 வயதுடைய இளைஞர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன இளைஞரைத் தேடும் பணியில் பிரதேச மீனவர்கள் உடனடியாக படகுகள் மூலம் ஈடுபட்டுள்ளனர். எனினும், கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதுடன், பலத்த காற்றும் வீசுவதால் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் சவாலுக்கு உள்ளாகியுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

