பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றி வந்த மயக்கவியல் வைத்தியர் மாத்திரைகளை உட்கொண்டு உயிர்மாய்த்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றி வந்த மயக்கவியல் வைத்தியர் ஒருவர் காணாமல்போன நிலையில், அவரது சடலம் இன்று (24) காலை மஹியங்கனை, மாபாகட – 17ஆம் கட்டை பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
பிரபாத் அனுராத தயரத்ன என்ற 49 வயதுடைய வைத்தியரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாபாகட, 17ஆம் கட்டை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு அருகிலுள்ள புதர் பகுதியில் இருந்து சுமார் 800 மீற்றர் தொலைவில் அமைந்திருந்த வனப்பகுதியிலுள்ள பாறை ஒன்றின் அருகே வைத்தியரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலத்திற்கு அருகில் சில மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வைத்தியர் நேற்று (23) முதல் காணாமல்போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும், அவர் நீண்டகாலமாக மன அழுத்தத்திற்காக மருந்துகளை உட்கொண்டு வந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து, மாத்திரைகளை உட்கொண்டதன் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ள போதிலும், மரணத்திற்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

