வவுனியா, தேக்கவத்தை பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்து சுமார் 16.750 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 20ஆம் திகதி தேக்கவத்தை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், வீட்டின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட 14 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேகநபர், கொள்ளையிடப்பட்ட வீட்டிற்கு அருகில் வசித்து வந்தவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொள்ளையிடப்பட்ட நகைகளில் ஒரு பகுதியை யாழ்ப்பாணத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் புதைத்து வைத்திருந்ததாகவும், மேலும் ஒரு தொகுதி நகைகளை வவுனியா நகரிலுள்ள பிரபல அடகுநிலையத்தில் அடமானம் வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட தங்க நகைகளின் மொத்த பெறுமதி சுமார் 57 இலட்சத்து 91 ஆயிரம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

