யாழ்ப்பாணம் ஒஸ்மானிய வீதிப் பகுதியில் நீண்டகாலமாக இடம்பெற்று வந்ததாகக் கூறப்படும் சட்டவிரோத மாடு வெட்டும் நடவடிக்கையை பொலிஸார் முறியடித்துள்ளனர்.
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ஜே.பி. ஜெயமாலின் வழிகாட்டலின் கீழ், யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே இந்த சட்டவிரோத நடவடிக்கை கண்டறியப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த இடத்திலிருந்து 58 கிலோகிராம் மாட்டு இறைச்சியும், உயிருடன் நான்கு மாடுகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட நான்கு மாடுகளில் மூன்று பசு மாடுகளும், ஒரு நாம்பன் மாடும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 43 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் நீண்டகாலமாக சட்டவிரோதமாக மாடு வெட்டும் நடவடிக்கை இடம்பெற்று வந்ததாகத் தெரிவிக்கப்படும் நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

