இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, புதுக்கடை பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் மேற்கொள்ளப்பட்ட பல மணி நேர விசாரணையைத் தொடர்ந்து அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.
பின்னர் மாலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவரைப் பிணையில் விடுவிக்க நீதிமன்று உத்தரவிட்டது.
அங்கீகரிக்கப்பட்ட ஆள்சேர்ப்பு நடைமுறைகளுக்குப் புறம்பாக, தேசிய லொத்தர் சபையில் ஐந்து நபர்களை ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்து, அவர்களைத் தனது தனிப்பட்ட பணியாளர்களுடன் இணைத்துக் கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை தொடர்பாக ரவி கருணாநாயக்க முன்னர் நான்கு சந்தர்ப்பங்களில் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர் ஆஜராகியிருக்கவில்லை.
மேலும், இரு நாள்களுக்கு முன்னர் பத்தரமுல்ல, ராஜமல்வத்த வீதியிலுள்ள அவரது வீட்டுக்கு விசாரணையாளர்கள் சென்றிருந்த வேளையிலும் அவர் வீட்டில் இருக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Source: https://samugammedia.com/former-minister-ravi-karunanayake-released-on-bail-1788180882

