கம்பஹா – ராகம – தேவத்த வீதியில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று (05) அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தில் வாகனத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது.
இன்று அதிகாலை சுமார் 5.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர்.
காரை செலுத்திச் சென்ற சாரதி நித்திரைக் கலக்கம் காரணமாக தூங்கியதையடுத்து, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் அமைந்திருந்த சுவர் மற்றும் மின்கம்பத்தில் மோதியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்த போதிலும், சாரதி உள்ளிட்ட எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


இதேவேளை இரத்தினபுரி – எஹெலியகொட, தோரணகொட பகுதியில் இன்று (05) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஓட்டுநர் உட்பட மூவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தோரணகொட எரிவாயு நிலையத்திற்கு அருகில் பயணித்த தனியார் பயணிகள் பேருந்து, சாலையின் வலதுபுறத்தில் இருந்த மரம் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்ற வேளையில் பேருந்தை அதன் நடத்துனர் செலுத்திச் சென்றதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

