வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் தேர்த்திருவிழா இன்று புதன்கிழமை காலை கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த மாதம் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் திருவிழா தொடர்ந்துவரும் நிலையில், இன்று காலை 6.15 மணிக்கு வசந்த மண்டபப் பூஜை ஆரம்பமாகி, அதனைத் தொடர்ந்து, ஆறுமுகப் பெருமான் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.
தேர்த்திருவிழாவின்போது காவடிகள், அங்கப் பிரதட்சினங்கள், கற்பூரச்சட்டிகள் ஏந்துதல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களைப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்திபூர்வமாக நிறைவேற்றி முருகப்பெருமானின் அருளை பெற்றனர்.
இன்றைய தேர்த்திருவிழாவைக் கண்டுகளிப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.




