வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் வெப்பச்சலன மழை பெய்யத் தொடங்கியுள்ள நிலையில், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று நண்பகலுக்குப் பின்னர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், எதிர்வரும் 14ஆம் திகதிக்குப் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் வெப்பச்சலன மழை மேலும் செறிவடையக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், செப்டெம்பர் மாதத்தின் இறுதிப் பகுதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடையிடையே வெப்பச்சலன மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெப்பச்சலன மழை என்பது இடி, மின்னல் நிகழ்வுகளுடன் கூடியதாக இருப்பதால், பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, பரந்த வயல்வெளிகளில் பணியாற்றும் விவசாயிகள் இடி, மின்னல் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் செப்டெம்பர் மாதத்தில் பதிவான வெப்பச்சலன மழையுடன் கூடிய இடி, மின்னல் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், நீண்ட நாட்களாக மழை பெய்யாத பகுதிகளில் முதன்முறையாக மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், அந்த மழையில் நனைவதைத் தவிர்ப்பது சிறந்தது.
நீண்ட காலமாக வளிமண்டலத்தில் தேங்கியுள்ள தூசுத் துணிக்கைகள் மற்றும் மாசுக்களை மழை கீழிறக்கக்கூடும் என்பதால், அவ்வாறான மழையில் நனைவது உடல்ரீதியான சில அசௌகரியங்களை ஏற்படுத்தக்கூடும் எனவும் பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, காலபோக புழுதி விதைப்பை உடனடியாக ஆரம்பிப்பதற்குப் பதிலாக, இந்த மழையின் தொடர்ச்சியை சில நாட்கள் அவதானித்த பின்னர் விதைப்பை தீர்மானிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெப்பச்சலன மழையின் உருவாக்கத்தை வளிமண்டல காரணிகள் மட்டுமன்றி உள்ளூர் புவியியல் காரணிகளும் தீர்மானிப்பதால், ஒரு பகுதியில் ஒருமுறை மழை பெய்த பின்னர் அதே பகுதியில் உடனடியாக மீண்டும் மழை கிடைக்கும் என்பது உறுதியானதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


