வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட 2 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இந்த வீடுகள் கையளிக்கும் நிகழ்வு வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ந. திருலிங்கநாதன் தலைமையில் நேற்று (12) பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்றது.
இதன்போது, ஜே/392 வல்வெட்டித்துறை தென்கிழக்கு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த திருமதி சிவாஜி நந்தினி, ஜே/395 பொலிகண்டி தெற்கு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த ஆறுமுகம் மனோகரன் மற்றும் ஜே/417 துன்னாலை வடக்கு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த இராசா சசிகுமார் ஆகியோருக்கே வீடுகள் வழங்கப்பட்டன.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் குறித்த வீடுகளை பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர்.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன், கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் எஸ். கபிலன், உதவிப் பிரதேச செயலர் பசுபதி தயானந்தன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரஜாசக்தி உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.





Source: https://samugammedia.com/new-houses-handed-over-to-three-families-in-paruthithurai-1789276513

