புத்தளம் -மாரவில, சிலுவை தேவாலயத்திற்கு அருகிலுள்ள கடற்பகுதியில் நீந்தச் சென்ற 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை (12) மாலை சுமார் 6 மணியளவில் இடம்பெற்றதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயர்தர கணிதப் பிரிவில் பயின்று பல்கலைக்கழகத்திற்குத் தகுதி பெற்ற குளியாபிட்டிய, அனுக்கனையைச் சேர்ந்த விதானகே ஷாலித தனுர்தர மதுஷான் என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
குறித்த இளைஞர், நண்பர்கள் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவுடன் குளியாபிட்டியிலிருந்து மாரவில கடற்கரைக்கு சுற்றுலா சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடற்கரையில் பாறைகள் அமைந்துள்ள பகுதியில் மணல் திட்டில் நின்றிருந்தபோது, திடீரென சீறிப்பாய்ந்த பாரிய கடல் அலையில் சிக்கி அனைவரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதன்போது பிரதேசவாசிகள் துரிதமாகச் செயற்பட்டு சிலரை மீட்டதுடன், இளைஞர் ஒருவர் மற்றொருவரைக் காப்பாற்ற முயன்றபோது நூலிழையில் உயிர்தப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், ஷாலித தனுர்தர மதுஷானை மீட்க முடியாமல் போனதுடன், அவர் கடலில் காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன இளைஞரைத் தேடும் பணியில் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். பிரதேச மீனவர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, நேற்று பிற்பகல் அதே கடற்பகுதியில் கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட மூன்று பெண்களை பிரதேசவாசிகள் உடனடியாக மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாரவில கடற்பகுதியில் அண்மைக்காலமாக நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பிரதேசவாசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் இப்பகுதியில் கடலில் நீராடிய 15 பேர் அலைகளில் சிக்கியுள்ளதுடன், அவர்களில் நான்கு பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இப்பகுதியில் கடலில் இறங்குவதையும் நீராடுவதையும் தவிர்க்குமாறு பொலிஸாரால் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டுள்ள போதிலும், அவற்றை சிலர் புறக்கணிப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், கடற்கரைக்கு வருபவர்கள் எச்சரிக்கைகளை கவனிக்காமல் ஆபத்தான பகுதிகளில் கடலில் இறங்குவதே இவ்வாறான அனர்த்தங்களுக்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

