யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்டுள்ள ‘போராட்டம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
ஈழத்தை களமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ராஜ் சிவராஜின் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
உதைப்பந்தாட்ட வீரர் ஒருவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் மூலம் றீகன் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். கதாநாயகியாக நிவேதிகா ராசையா நடித்துள்ளதுடன், ஈழ சினிமாவின் பிரபல நடிகர், நடிகைகளும் இதில் இணைந்துள்ளனர்.
திரைப்படத்திற்கு பூவன் மதீசன் இசையமைத்துள்ளதுடன், ஏ.கே. கமல் ஒளிப்பதிவுப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
படத்தின் பாடல்களை வாகீசன் ராசையா, உமாகரன் ராசையா, பொத்துவில் அஸ்மீன், பூவன் மதீசன், கே.எஸ். சாந்தகுமார் மற்றும் அருண் யோகதாசன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
தென்னிந்தியாவின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான தேனிசைத் தென்றல் தேவா, பாடகர் சத்யன், பாடகி கோவை கமலா உள்ளிட்டோருடன் ஈழத்தைச் சேர்ந்த வாகீசன் ராசையா, கோகுலன் சாந்தன், தேவன் அய்யா, பூவன் மதீசன், டயஸ் மற்றும் அக்சலா ஆகியோரும் பாடல்களுக்கு குரல் கொடுத்துள்ளனர்.
இசை வெளியீட்டு நிகழ்வில் தென்னிந்தியாவின் பிரபல யூடியூப்பர் மைக் செட் சிறீராம், பிரபல பாடகர் சத்யன், திரைப்படக் குழுவினர் மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.
‘போராட்டம்’ திரைப்படம் எதிர்வரும் 2ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

