வவுனியா – கண்டி வீதியில் பாடசாலை மாணவர்கள் மீது இளைஞர் குழுவொன்று மேற்கொண்ட தாக்குதலில் உயர்தர மாணவர்கள் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (15) மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் குறித்த இரு மாணவர்களும் பாடசாலை நிறைவடைந்த பின்னர் வீடு செல்வதற்காக வெளியே வந்துள்ளனர்.
இதன்போது, பாடசாலைக்கு வெளியே 10க்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட இளைஞர் குழுவொன்று நின்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் குறித்த மாணவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இதில் உயர்தரத்தில் கல்வி பயிலும் இரு மாணவர்கள் காயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வவுனியா நகரை அண்மித்த பாடசாலைகளில் பாடசாலை நிறைவடையும் நேரங்களில், குறித்த பாடசாலைகளுடன் தொடர்பில்லாத இளைஞர்கள் குழுக்களாக வந்து நிற்கும் நிலை தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு வருவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான குழுக்களால் பாடசாலை பகுதிகளில் குழு மோதல்கள் உள்ளிட்ட சம்பவங்களும் இடம்பெற்று வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாடசாலை நிர்வாகமும் பொலிஸாரும் இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

