வவுனியா மாவட்டத்தின் வவுனியா பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அலியாமருதமடுக் குளம் தொடர்பில் முன்வைக்கப்பட்டு வரும் பல்வேறு முறைப்பாடுகளை ஆராய்ந்து, அவற்றுக்கு ஒழுங்குமுறையானதும் நிரந்தரமானதுமான தீர்வை எட்டுவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அலியாமருதமடுக் குளம் தொடர்பில் சிலரால் தொடர்ச்சியாக பல்வேறு அரச திணைக்களங்களுக்கு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், பிரச்சினையின் உண்மை நிலையை நேரில் ஆராய்ந்து, அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி தீர்வு காண வேண்டும் என வடக்கு மாகாண விவசாய அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போது ஆளுநர் அறிவுறுத்தியிருந்தார். அதற்கமைவாக, நேற்று செவ்வாய்க்கிழமை முதற்கட்டமாக களப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், வவுனியா மாவட்ட செயலர், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், மேலதிக மாவட்டச் செயலாளர், வவுனியா பிரதேச செயலாளர், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், வவுனியா பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர், கமநல அபிவிருத்தி பிரதி ஆணையாளர், கிராம அலுவலர் மற்றும் அப்பகுதி மக்கள் ஆகியோர் குளப்பகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடினர்.
இதன்போது, தனிநபர் ஒருவரால் ஏற்படுத்தப்படுவதாகக் கூறப்படும் இடையூறுகள் தொடர்பில் பொதுமக்களாலும் பொது அமைப்புக்களாலும் பல்வேறு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. அரச திணைக்களங்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாகச் செயற்படாமல் தன்னிச்சையான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் ஏனைய விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
குறிப்பாக, காலபோகச் செய்கைக்கான கூட்டம் நடத்தப்படுவதற்கு முன்னரே தன்னிச்சையாக விதைப்பு மேற்கொள்ளுதல், போலிச் சாவியைப் பயன்படுத்தி நீர்ப்பாசனத்துக்கான நீரைத் திறந்து விடுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பொதுமக்களும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
இதனுடன், வனவளத் திணைக்களத்துடன் தொடர்புடைய ஆக்கிரமிப்பு மற்றும் காணி ஆவணப் பிரச்சினைகள், அப்பகுதியின் வீதிகளின் மோசமான நிலைமை மற்றும் போக்குவரத்துச் சேவை இல்லாமை ஆகிய விடயங்களும் மக்களால் சுட்டிக்காட்டப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, அலியாமருதமடுக் குளம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து வவுனியா மாவட்டச் செயலகத்தில் அரச அதிகாரிகளின் பங்கேற்புடன் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது இதுவரை இடம்பெற்ற நடவடிக்கைகள், முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் தனிநபரால் ஏற்படுத்தப்படுவதாகக் கூறப்படும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.
குறித்த தனிநபரின் பெயரில் பதிவுகளில் அண்ணளவாக 70 ஏக்கர் வரையான காணி காணப்படுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர் நா.வேதநாயகன், “ஏழைகள் என்பதற்காக அந்த மக்கள் பாதிக்கப்படக் கூடாது. அவர்களுக்குரிய காணிகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.
இனிவரும் காலங்களில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பல்வேறு யோசனைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அதன்படி, முன்னாயத்தப் பயிர்ச்செய்கைக் கூட்டத்தை நீர்ப்பாசனத் திணைக்களம் நடத்தி, அதனைத் தொடர்ந்து காலபோகச் செய்கைக் கூட்டத்தை நடத்துவது தொடர்பில் ஆராயப்பட்டது.
மேலும், வயல் காணிகளின் பதிவுகளுக்கு அமைவாக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. நீண்டகாலப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில், குளத்தின் கீழான காணிகளைச் சுவீகரித்து, அவற்றை உரிய முறையில் அனைத்து மக்களுக்கும் பகிர்ந்தளிப்பதன் மூலம் தீர்வை ஏற்படுத்துவது தொடர்பான யோசனையும் முன்வைக்கப்பட்டது.
இந்த அனைத்து விடயங்களையும் மேலும் தீவிரமாக ஆராய்ந்து, சட்டரீதியான, நிர்வாகரீதியான மற்றும் நடைமுறைக்கு ஏற்ற நிலையான தீர்வொன்றை எட்டுவதற்கு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், வவுனியா மாவட்ட செயலர் பி.ஏ.சரத் சந்திர, வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் எஸ்.சிவசிறி, மேலதிக மாவட்ட செயலர்கள், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர், வவுனியா பிரதேச செயலாளர், வவுனியா பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் மற்றும் கமநல அபிவிருத்தி பிரதி ஆணையாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

