தீவிர வறட்சி காரணமாக பல லட்சம் ரூபாய் செலவில் பயிரிடப்பட்ட அன்னாசி மற்றும் வாழைப்பழப் பயிர்கள் முற்றிலும் அழிந்துள்ள நிலையில், தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என சிங்ஹகம பகுதி விவசாயி கவலை தெரிவித்துள்ளார்.
ஹிங்குரக்கொட பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 31 சிங்ஹகம பகுதியைச் சேர்ந்த விவசாயி ஏ.ஜி. திலகரத்ன பண்டார இவ்வாறு கவலை தெரிவித்துள்ளார்.
இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையிலும் கூலி ஆட்களை அமர்த்தி சுமார் 2 ஏக்கர் நிலப்பரப்பில் அன்னாசி மற்றும் வாழைப்பழங்களை பயிரிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக சுமார் 4 முதல் 5 இலட்சம் ரூபாய் வரை செலவிட்டதாகக் கூறியுள்ள அவர், தற்போது நிலவும் கடுமையான வறட்சி மற்றும் கிணறுகளில் நீர் வற்றியதன் காரணமாக பயிர்கள் அனைத்தும் முற்றாக அழிந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் கிராம உத்தியோகத்தருக்கு அறிவித்த போதிலும், இதுவரை அவர் நேரில் வந்து சேதங்களை பார்வையிடவில்லை என விவசாயி குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், தகுதியற்றவர்களுக்கும் கைவிடப்பட்ட வீடுகளுக்கும் நிவாரண நிதி வழங்கப்படும் நிலையில், உண்மையில் பாதிக்கப்பட்டுள்ள ஏழை விவசாயிகளுக்கு உரிய உதவிகள் கிடைப்பதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தமது பகுதி ஹிங்குரக்கொட பிரதேச செயலகத்திலிருந்து சுமார் 70 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளதால், சேவைத் தேவைகளுக்காக அங்கு சென்று வருவது பெரும் சிரமமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, தமது பகுதியை சுமார் 18 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கந்தளாய் பிரதேச செயலகப் பிரிவுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தகுதியான அதிகாரிகளை நியமித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

