முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சாட்சியம் பதிவு செய்வதற்கு முன்னிலையாகி உள்ளார்.
2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட அவர் இன்று (28) நீதிமன்றில் சாட்சியம் வழங்கி உள்ளார்.
வழக்கில் முதல் சாட்சி
2008ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி பொரலஸ்கமுவ பகுதியில் அப்போதைய விவசாய அமைச்சராக செயற்பட்ட மைத்திரிபால சிறிசேனவை கொல்லும் நோக்கில் தற்கொலை குண்டு தாக்குதலுக்கு உதவியதாக இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சப்புவித முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, முன்னதாக பிறப்பிக்கப்பட்டிருந்த அழைப்பாணைக்கு அமைய சாட்சியாளரான மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
அதன்படி, வழக்கில் முதல் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதியிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

