மன்னார் காற்றாலை தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் காற்றாலை வேண்டாம் என மக்கள் அனைவரும் ஒருமித்து எதிர்ப்பை தெரிவித்த நிலையில், அதில் கலந்துகொண்டிருந்த எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
மன்னார் தீவு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்கள்
தொடர்பாக குறித்த பகுதி மக்களுடன் கலந்துரையாட எரிசக்தி அமைச்சர்
பொறியியலாளர் குமார ஜயக்கொடி தலைமையிலான குழுவினர் இன்றையதினம்(05.09.2025) வெள்ளிக்கிழமை(5) காலை மன்னாரிற்கு வருகை தந்தனர்.
மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் சௌத்பார் பகுதியில் 2 காற்றாலை
கோபுரங்களும், தாழ்வு பாட்டில் 2 காற்றாலை கோபுரங்களும், தோட்டவெளியில் 2
காற்றாலை கோபுரங்களும் அமைக்கப்படவுள்ளது.
அமைச்சரின் மன்னார் விஜயம்
குறித்த 5 காற்றாலை கோபுரங்களும் 20 மெகா வாட் கொண்டதாக
அமைக்கப்படவுள்ளது. மேலும், ஓலைத்தொடுவாய் பகுதியில் 06 காற்றாலை மின்
கோபுரங்களும், பேசாலை மேற்கில் 2 காற்றாலை மின் கோபுரங்களும்
அமைக்கப்படவுள்ளது.
இந்த 8 காற்றாலை மின் கோபுரங்களும் 50 மெகா வாட்
கொண்டதாக அமைக்கப்படவுள்ளது.

இவ்வாறிருக்க, குறித்த 5 கிராமங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின்
கோபுரங்கள் அமைப்பது குறித்து கிராம மக்களின் கருத்துக்களை கேட்டறிய
எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தலைமையிலான குழுவினர்
மன்னாரிற்கு விஜயம் செய்தனர்.
இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை(5) காலை 10 மணியளவில் முதலாவது கலந்துரையாடல் மன்னார் சாந்திபுரம் ,சௌத்பார் கிராமங்களை
உள்ளடக்கி சாந்திபுரம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது, அமைச்சருடன் அதிகாரிகள் வருகை தந்தனர்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், ரவிகரன், ஜெகதீஸ்வரன்
ஆகியோர் கலந்து கொண்டதோடு, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், உதவி
அரசாங்க அதிபர் எம்.பிரதீப், மன்னார் நகர பிரதேச செயலாளர் கா.காந்தீபன், மன்னார்
நகர சபையின் தவிசாளர் டேனியல் வசந்தன், அழைக்கப்பட்ட திணைக்கள பிரதிநிதிகள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
பதில் வழங்காத அமைச்சர்
இதன்போது, அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் மக்களுடன் கலந்துரையாடிய போதும் மக்கள்
தமது கிராமங்களுக்குள் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்கள் தேவை
இல்லை எனவும் குறித்த காற்றாலை மின் கோபுரங்களை அமைக்க தாம் எதிர்ப்பு
தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், மன்னார் தீவில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 30 காற்றாலை மின்
கோபுரங்களால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து
வருவதாகவும், கடற்றொழிலாளர்கள் தொழிலை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும்
சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், தமது கிராம மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமாக
இருந்தால் காற்றாலை கோபுரங்களை மன்னார் தீவில் இருந்து அப்புறப்படுத்த
வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்ததோடு, எமது பகுதிக்குள் காற்றாலை அமைக்க
ஒரு போதும் அனுமதி வழங்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
எனினும், அமைச்சர் தலைமையிலான குழுவினர் மக்களுடன் கலந்துரையாடி தமக்கு சாதகமான
பதிலை எதிர்பார்க்க முயற்சி செய்த போதும் கலந்து கொண்ட அனைத்து மக்களும் தமது
பகுதிக்குள் காற்றாலை வேண்டாம் என ஒருமித்து
கூறியுள்ளனர்.
இந்தநிலையில், அமைச்சர் தலைமையிலான குழுவினர் அங்கிருந்து வெளியேறினர். குறித்த
கலந்துரையாடல் குறித்து ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கருத்து கேட்ட போதும்
எவ்வித பதிலும் அவரால் வழங்கப்படவில்லை.






