ஐரோப்பிய விமான நிறுவனமான ஸ்மார்ட்விங்ஸ், போலந்தின் வார்சாவிலிருந்து ஓமன், மஸ்கட் வழியாக கொழும்புக்கு டிசம்பர் மாதம் முதல் வாராந்திர விமான சேவைகளை தொடங்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஊடக அறிக்கைகளின்படி, மஸ்கட்டில் இருந்து கொழும்புக்கும் கொழும்பிலிருந்து மஸ்கட்டுக்கும் போயிங் 737 மேக்ஸ் விமானங்களைப் பயன்படுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல விமான நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பயண அட்டவணை
தொடர்புடைய அட்டவணையின்படி, விமானம் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 5.30 மணிக்கு வார்சாவிலிருந்து புறப்பட்டு இரவு 8.55 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடையும்.

பின்னர், மஸ்கட் மற்றும் வார்சாவிற்கு திரும்பும் விமானம் கொழும்பில் இருந்து இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.40 மணிக்கு போலந்து தலைநகரை சென்றடையும்.
உலகளவில் சேவைகள்
ஸ்மார்ட்விங்ஸ் என்பது செக் நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனம் என்றும் மத்திய ஐரோப்பாவில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்று எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விமான நிறுவனம் ஸ்மார்ட்விங்ஸ் குழுமத்தின் ஒரு பகுதியாகும், இதில் ஸ்மார்ட்விங்ஸ் போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் ஹங்கேரி ஆகியவை அடங்கும்.
மேலும் தற்போது உலகளவில் 80 க்கும் மேற்பட்ட இடங்களுக்கு குறித்த நிறுவனம் விமானங்களை இயக்கி வருகிறது.

