குருநாகலை – கல்கமுவ, கொஹொபன்குளம் கிராமத்தில், பொலிஸாரால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நபர் ஒருவர், அவருக்காக இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் உயிருடன் தனது வீட்டிற்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்கமுவ, கொஹொபன்குளம் பகுதியைச் சேர்ந்த டி. எம். கீர்த்திசேன என்பவரே இவ்வாறு உயிருடன் வீடு திரும்பியுள்ளார்.
வாரியப்பொல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கீர்த்திசேன சிறைச்சாலையினுள் உயிரிழந்துவிட்டதாக நான்னேரிய பொலிஸாரால் அவரது உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து அதிர்ச்சியடைந்த உறவினர்களும் கிராம மக்களும் இணைந்து அவரது இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
கிராமம் முழுவதும் துயரப் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், இறுதிச்சடங்கு வீட்டுக்கான பந்தல் அமைத்தல் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் கீர்த்திசேன உயிருடன் தனது வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளார்.
தனது இறுதிச்சடங்கிற்காக தயார்படுத்தப்பட்டு வந்த வீட்டிற்கே அவர் உயிருடன் வந்த சம்பவத்தால், கொஹொபன்குளம் கிராமம் முழுவதும் பெரும் பரபரப்பும் ஆச்சரியமும் ஏற்பட்டது

