உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரித்து, அவர்களின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முற்பட்டால், அது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு, ஜா-எல பகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஏனைய முக்கிய பிரச்சினைகளை மூடிமறைத்துவிட்டு, அரசாங்கம் நீதித்துறை மற்றும் நீதிமன்றக் கட்டமைப்பை அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்த முயற்சிப்பதாக நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டினார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரித்து, அவர்களின் பதவிக்காலத்தை நீடிப்பதற்காக அரசாங்கம் அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வர முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிப்பதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதாகக் கூறிய அவர், இது தொடர்பில் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம், ஆசிய சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட சட்டத்துறை அமைப்புகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பு தொடர்பான சட்டமூலத்தை எதிர்த்து நீதிமன்றத்தை நாடும் போது, நீதிபதிகளே தங்களது சொந்த பதவிக்காலம் தொடர்பில் தீர்ப்பளிக்க வேண்டிய சங்கடமான சூழ்நிலை ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே, அரசாங்கம் உண்மையிலேயே சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்ட விரும்பினால், இந்த அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான இறுதி முடிவை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.
சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் இந்தத் திருத்தத்தை அங்கீகரித்தால், அதனை ஏற்றுக்கொள்வதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், இறுதித் தீர்மானத்தை மக்களே எடுக்க வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

