கட்டான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த 28ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (29) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கொலையை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேக நபரும், அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 23, 47 மற்றும் 49 வயதுடையவர்கள் எனவும், கதிரான, ஏத்துகால மற்றும் கொச்சிக்கடை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டான பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Source: https://samugammedia.com/murder-incident-in-katana-area-three-arrested-1788069131

