தொப்பி மற்றும் கோட் அணிந்து வரும் பேரினவாத ஏஜெண்டுகளை தோற்கடிக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து,
வவுனியாவில் இன்று (03) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்
உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மக்களின் வாக்குகள்
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
“சாப்பாட்டுப் பார்சல்களுக்கும் சில்லறைச் சலுகைகளுக்கும் மக்களின்
வாக்குகளைக் கொள்ளையடிக்கும் கூட்டத்தினரிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
நாட்டின் பொருளாதாரத்தையும் இந்தக் கள்வர் கூட்டமே களவாடியது.
ராஜபக்சக்களிடம் இருந்த இக்கூட்டம், இப்போது ரணிலின் பாதுகாப்பில்
தஞ்சமடைந்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் ஒருவர் இவ்வளவு காலமும் எதையும்
செய்யாமல், இப்போதுதான் பொழுது விடிந்ததுபோல ஓடித்திரிகிறார்.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்துகொண்டு, சகல சமூகங்களையும் சமமாக நேசிக்கும்
பண்பட்ட அரசியல்வாதியான சஜித் பிரேமதாச, பாடசாலைகளுக்கு “ஸ்மார்ட்” வகுப்பறைகள், பேருந்துகளை வழங்குகிறார்.
அனுரகுமார திசாநாயக்க கல்வி பயின்ற பாடசாலைக்கும் இவை வழங்கப்பட்டுள்ளன.
சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கு இன்னும் சொற்பகாலங்களே உள்ளன. பேருந்துகளில்
மக்களைக் கொண்டுவந்து, மாயை காட்டும் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்ப நாட்டு
மக்கள் தயார்.
அரசியல் வாழ்வில் எதையுமே செய்யாத அனுரகுமார திசாநாயக்க, ஆட்சிக்கு வந்தால்,
எதையும் செய்யுமளவுக்கு அனுபவம் இருக்காது.இவரது ஆட்சியைக் கற்பனை செய்யவே
பயமாக உள்ளது.
சீனாவிலுள்ள உர்குர் இனத்து முஸ்லிம்களுக்கு நடப்பது என்ன? பள்ளிவாசலுக்குச்
செல்ல முடியாது. நோன்பு நோற்க முடியாது. புனித ஹஜ்ஜுக்குச் செல்வதற்கு
அனுமதியில்லை. இந்த அபாயகரமான நிலை இங்கும் வேண்டுமா?
மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழும் மாவட்டம் வவுனியா. இங்கு மூவாயிரம்
வீடுகளை அமைத்தோம். தொழிலாளர்களை நேசித்தோம். விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு உதவினோம். இவை, எவற்றையும் செய்யாமல், வாக்குக் கேட்க வந்துள்ள
ஏஜெண்டுகளை விரட்டிவிடுங்கள்.
அனுரகுமாரவுக்கு தொப்பி அணிந்த மௌலவி இருப்பதைப் போலவே, ரணில்
விக்ரமசிங்கவுக்கு “கோட்” அணிந்த அலிசப்ரி இருக்கிறார்.
முஸ்லிம்களை ஏமாற்ற வந்த பேரினவாத ஏஜேண்டுகளே இவர்கள். எனவே இந்த தருணத்தில் நிதானமாக செயற்பட
வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.