கந்தளாயில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில், NCH ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 13-வது ஆண்டு பிரம்மாண்ட ஐஸ்கிரீம் (குளிர்களி) தன்சல் இன்று (30) கந்தளாயில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
கந்தளாய் பிரதான வீதியில் அமைந்துள்ள நியூ சிட்டி ஒன் பிளஸ் டைல்ஸ் கிளப் (New City One Plus Tiles Club) காட்சி அறைக்கு முன்பாக நடைபெற்ற இந்நிகழ்வு, NCH ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவரும் இளம் தொழிலதிபருமான நப்றீஸ் அப்துல் றாசீக் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
“நல்லிணக்கம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த தன்சலில், இன, மத பேதமின்றி மூவின மக்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐஸ்கிரீம்களை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர். பொதுமக்களின் பெரும் வரவேற்பால் நிகழ்விடம் விழாக்கோலம் பூண்டிருந்தது.
இந்நிகழ்வில் இன்று ஒரே நாளில் மாத்திரம் சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ்கிரீம் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த சமூகப் பணியானது, கந்தளாய் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருவதும் சிறப்பம்சமாகும்.
Source: https://samugammedia.com/grand-ice-cream-dansal-in-kantale-for-the-13th-time-1782821117

