கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீன பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீன பிரஜைகள் சீகிரிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (28) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 23ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரில் சீன பிரஜைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சீன பிரஜை ஒருவர் கடத்தப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கடத்தப்பட்ட நபரின் சடலம் எஹெலியகொடை பகுதியில் உள்ள காட்டுப் பகுதியிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் ஏற்கனவே சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில சந்தேகநபர்களை கைது செய்வதற்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
இதன்போது, தேடப்பட்டு வந்த மூன்று சீன பிரஜைகளை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியையும் பொலிஸார் கோரியிருந்தனர்.
இந்நிலையில், சீகிரிய பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் மறைந்திருந்த நிலையில் இரு சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் இன்று (29) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

