கடந்த 2022ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அறிமுகப்படுத்தப்பட்ட இயற்கை உரத் திட்டத்தை முழுமையாக சீர்குலைத்தது முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவே என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்த்தன குற்றம் சாட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் மாவனெல்லை பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இயற்கை உரத் திட்டம் ஏன் தோல்வியடைந்தது என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நேரடியாகக் கேட்டபோது, அதற்கான காரணங்களை அவரே ஒப்புக்கொண்டதாக பிரசாத் சிறிவர்த்தன தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ஷவுக்குத் தெரியாமலேயே இயற்கை உரத் திட்டத்தின் முழுப் பொறுப்பையும் அசோக ரன்வல தனது நிறுவனத்தின் ஊடாக முன்னெடுத்ததாகவும், பேச்சுவார்த்தைகளில் முழு நம்பிக்கையைப் பெற்றிருந்த அவர், ஜே.வி.பியின் முக்கிய உறுப்பினர் என்பது தேர்தல் தோல்விக்குப் பின்னரே கோட்டாபய ராஜபக்ஷவுக்குத் தெரியவந்ததாகவும் அவர் கூறினார்.
அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே திட்டமிட்டுச் செய்யப்பட்ட சதித்திட்டத்துக்குப் பிரதிபலனாக அசோக ரன்வலவுக்கு சபாநாயகர் பதவி வழங்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக ஜே.வி.பியினர் ஊழல் செய்யவில்லை என்ற கருத்தை நிராகரித்த அவர், 2024ஆம் ஆண்டுக்கு முன்னரே அவர்கள் சட்டவிரோதமாகப் பணம் சம்பாதித்து முதலீடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள குமார் ஜயகொடி போன்றவர்கள் சுதந்திரமாக நடமாடுவதும் அதற்கான சான்று என அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, விஜயதாச ராஜபக்ஷவின் வீட்டில் பெயர் குறிப்பிடப்படாத ஒருவரிடமிருந்து 25 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றதாகவும் குற்றம் சாட்டினார்.
அநுர குமார திஸாநாயக்க லட்சக்கணக்கான ரூபாய் பெறும்போது அது “பரிசு” என்றும், பொதுமக்கள் அதேபோன்ற பணத்தைப் பெற்றால் அது “திருட்டு” என்றும் கூறப்படுவது எந்த வகையான கோட்பாடு என்பதை ஜே.வி.பியினர் மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

