நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவினால் இராணுவத் தளபதி மற்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோரைத் தொடர்புபடுத்தி வெளியிடப்பட்ட கருத்துக்கள் முற்றிலும் பொய்யானவை என கொழும்பு பேராயர் இல்ல பேச்சாளர் அருட் தந்தை சிறில் காமினி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
அத்துடன், மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 10ஆம் திகதி அல்லது அதற்கு அருகாமையிலான ஒரு தினத்தில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சிக் கூட்டமொன்றில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, ‘இராணுவத் தளபதி கடந்த ஜூலை மாதம் 02 ஆம் திகதி பழக்கூடையொன்றை எடுத்துக்கொண்டு கர்தினாலின் இல்லத்திற்குச் சென்றதாகவும், அதன் பின்னர் அவரது சேவைக்காலம் 2028 வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும்’ குறிப்பிட்டிருந்தார்.
இக்கூற்று சில பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செய்தியாகப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. எனினும், திருத்தந்தையின் தலைமையில் நடைபெற்ற மாநாடொன்றில் கலந்துகொள்வதற்காக வத்திக்கான் சென்றிருந்த பேராயர் கர்தினால் ஆண்டகை, ஜூலை மாதம் 03 ஆம் திகதியே மீண்டும் இலங்கைக்குத் திரும்பினார்.
அவர் நாட்டிற்குத் திரும்பிய நாள் முதல் இன்று வரை இராணுவத் தளபதிக்கும் கர்தினால் ஆண்டகைக்கும் இடையில் எவ்வித சந்திப்புகளும் இடம்பெறவில்லை. எனவே, சாமர சம்பத் தசநாயக்கவின் கருத்து முற்றிலும் பொய்யானது எனக்கூறி அதனை முழுமையாக நிராகரிக்கின்றோம்.
மதவாதத்தை அடிப்படையாகக் கொண்டு, நாட்டின் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதன் மூலம் குறுகிய அரசியல் இலாபங்களை ஈட்டிக்கொள்ளும் இழிவான நோக்கிலேயே இத்தகைய வதந்திகள் பரப்பப்படுகின்றன. எனினும், பாராளுமன்ற உறுப்பினரை விட இந்நாட்டு மக்கள் மிகவும் புத்திசாதுரியமானவர்கள் மற்றும் முதிர்ச்சியடைந்தவர்கள் என்று நாம் நம்புகிறோம்.
வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் இந்த முற்றிலும் பொய்யான கருத்தை வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிராகச் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்து கர்தினால் ஆண்டகையின் சட்டத்தரணிகள் தற்போது தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

