நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக பதுளை, மொனராகலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தொடர்ச்சியாக காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகி வருவதாக வனப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திம பாலமகும்புர வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த மூன்று மாவட்டங்களுக்கு மேலாக அனுராதபுரம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் அதிக வெப்பநிலை காரணமாக காட்டுத் தீ பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நக்கிள்ஸ் வனப்பகுதியின் ஹுன்னஸ்கிரிய பகுதியில் கடந்த இரண்டு நாட்களாகப் பரவியிருந்த காட்டுத்தீ தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, உலக நாடுகளைப் பாதித்து வரும் ‘எல் நினோ’ காலநிலை மாற்றத்தின் தாக்கம் இலங்கையின் வானிலையிலும் தற்போது உணரப்படத் தொடங்கியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய காலநிலை முன்னறிவிப்புகளின்படி, தற்போது பலவீனமான நிலையில் காணப்படும் ‘எல் நினோ’ தாக்கம் எதிர்வரும் ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக தீவிரமடையும் வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் அதிக வெப்பநிலை மற்றும் வறட்சி நிலை மேலும் மோசமடையக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

