ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்திற்கு முரணானது என உயர்நீதிமன்றம் இன்று (10) தீர்ப்பளித்துள்ளது.
காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட உள்ளிட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பின்னர் உயர்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 2018ஆம் ஆண்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து, அவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆறு வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.
இந்நிலையில், சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஞானசார தேரருக்கு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.
இந்த பொதுமன்னிப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்திற்கு முரணானது எனத் தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி, குறித்த பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

