கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டா வத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஹைட்ரஜன் பெரோக்சைட் (Hydrogen Peroxide) இரசாயனத்தை பருகியதில் உயிரிழந்துள்ளார்.
வவுனியா, செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த 3 வயதுடைய தினேஸ்காரம் ஹயனிகா என்ற சிறுமியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மரண விசாரணை நேற்று (24) கம்பளை மருத்துவமனையில் இடம்பெற்றபோது இந்த அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.
வவுனியாவிலிருந்து சிறுமியின் பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினர் டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர். கடந்த 23ஆம் திகதி இரவு சுமார் 8 மணியளவில் சிறுமிக்கு தாகம் ஏற்பட்டுள்ளது.
அப்போது வீட்டின் ஜன்னல் படியில் வைக்கப்பட்டிருந்த போத்தலில் இருந்த திரவத்தை தண்ணீர் என நினைத்து சிறுமி பருகியதாக மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் மாலை குடும்பத்தினர் வீட்டிற்கு வெளியே இருந்த நிலையில், சிறுமி வீட்டிற்குள் சென்று ஜன்னலில் வைக்கப்பட்டிருந்த இரசாயன திரவத்தை பருகியுள்ளார்.
திரவத்தை பருகிய உடனேயே சிறுமியின் வாயிலிருந்து நுரை கலந்த உமிழ்நீர் வெளியேறியதாக அவரது தந்தை ஜே. விக்னேஸ்வரன் மரண விசாரணையில் சாட்சியமளித்துள்ளார்.
சிறுமியின் தந்தை மேலும் தெரிவிக்கையில், தங்களுக்கு ஒரே ஒரு பெண் குழந்தை எனவும், உறவினர் வீட்டிற்கு வந்திருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றதாகவும் கூறியுள்ளார்.
சிறுமி இரசாயன திரவத்தை பருகியதை அறிந்ததும் உடனடியாக பன்விலதென்ன மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதிலும், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
தொழுவ பிரதேச செயலகப் பிரிவின் திடீர் மரண விசாரணை அதிகாரி லலித் வர்ணரத்ன முன்னிலையில் மரண விசாரணை இடம்பெற்றுள்ளது.

