புத்தளம் மாவட்டம் ஆராச்சிகட்டுவ, செங்கல்ஓயா சாலையின் மணல் முனைப் பகுதியில் நீராடச் சென்ற 13 வயது பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆராச்சிகட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் ஆராச்சிகட்டுவ வைரன்கட்டுவ பகுதியைச் சேர்ந்த சிலாபம் மஹா வித்தியாலயத்தில் 9 ஆம் வகுப்பில் கல்வி கற்ற எஸ்.ஜே.எம். லகிந்து சாமிக என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மூத்த சகோதர்கள் இருவரைக் கொண்ட குடும்பத்தில் இளைய மகனான லகிந்து, கடந்த 19 ஆம் திகதி மாலை பாடசாலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய பின்னர், தனது நண்பருடன் வெளியே செல்வதாக கூறி வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். அப்போது பெற்றோர் இருவரும் வேலை நிமித்தமாக வீட்டில் இல்லாத நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகளின் படி, “இரண்டு செருப்புகள் வாங்க செல்வதாக” கூறி நண்பருடன் வெளியேறிய லகிந்து, பின்னர் செங்கல்ஓயா மணல் முனைப் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு நீராடிக் கொண்டிருந்த போது, ஆழமான பகுதிக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
அவருடன் சென்ற நண்பர் பாதுகாப்பாக கரையை எட்டியதுடன், உடனடியாக உதவி கோரி அலறியுள்ளார். அதன் பின்னர் அப்பகுதிக்கு விரைந்த அயலவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும், நீரில் மூழ்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மாணவன் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

