ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினரை இலக்கு வைத்து சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் அநாகரிகமான அவதூறுப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்து, கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அவர் இன்று (08) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குச் சென்று முறைப்பாட்டை பதிவு செய்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ஷ தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பிலும் ஏற்கனவே முறைப்பாடு செய்துள்ளதாக பசன் கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ஷவுக்கு தற்போது விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு அச்சுறுத்தல் விடுத்த நபர்களுக்கு எதிராக சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுமா என்பதை எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள மக்கள் பேரணியில் அவரது இல்லாமையை ஈடுசெய்ய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஷிராந்தி ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷவின் சகோதரர்கள் மற்றும் அவரது மனைவி லிமினி ராஜபக்ஷ உள்ளிட்டோரை களமிறக்குமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, “நாமல் இல்லாத குறையை நிவர்த்தி செய்ய லிமினியை களமிறக்க வேண்டும்” என்ற கோரிக்கை வலுப்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் நாமல் ராஜபக்ஷவுடன் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களின்போது லிமினி ராஜபக்ஷவின் ஆளுமை, மொழித்திறன் மற்றும் வணிக அறிவை மக்கள் அவதானித்துள்ளமையே இந்த எதிர்பார்ப்புக்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, லிமினி ராஜபக்ஷ எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறும் பேரணியில் கலந்துகொண்டால் அது அரசியல் ரீதியான திருப்புமுனையாக அமையக்கூடும் என்ற அச்சத்தில் சில தரப்பினர் அவதூறுப் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் பசன் கஸ்தூரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
குறிப்பாக, அவரது தந்தை திலக் வீரசிங்க மற்றும் அவரது வர்த்தக நடவடிக்கைகளை இலக்கு வைத்து தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தலைவர்களின் குடும்பங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இத்தகைய அவதூறுப் பிரசாரங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கோரியுள்ளதாகவும் பசன் கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
மேலும், பெண்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் அவதூறுகள் மற்றும் இழிவான செயற்பாடுகளைத் தடுப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் எதிர்காலத்தில் கொண்டுவரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

