யாழ்ப்பாணத்தில் இரவு வேளையில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து, கத்தி முனையில் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாகக் கூறப்படும் இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் அமைந்துள்ள தனது வீட்டுக்குள் கடந்த 14ஆம் திகதி இரவு இளைஞன் ஒருவர் அத்துமீறி நுழைந்து, கத்தி முனையில் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாக பெண்ணொருவர் மறுநாள் (15) யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெரா காட்சிகளை ஆய்வு செய்து சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸார், நேற்று (17) சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விசாரணைகளின்போது, கடந்த 14ஆம் திகதி பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தது தானே என சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இளைஞன் இதற்கு முன்னரும் வேறு வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளாரா அல்லது வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

