மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை பெரும்போகத்தில் 74900ஹெக்டெயரில் நெற்செய்கை முன்னெடுக்கப்படவுள்ளதுடன் 15இலட்சத்து 43ஆயிரத்து 500 கிலோ உரம் தேவையினை பூர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை முன்னெடுக்கப்படவுள்ள பெரும்போக நெற்செய்கை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் மாவட்ட விவசாய பணிப்பாளர் சிவனேசனின் ஒருங்கமைப்பில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எச்.அருள்ராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மத்திய,மாகாண நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர்கள், மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஆர்.யோகராஜன், தேசிய உரச் செயலகத்தின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர், விவசாய அமைச்சரின் மாவட்ட இணைப்பாளர் கே.திலகநாதன் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், துறைசார் அதிகாரிகள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர்.
குறிப்பாக, தற்போதைய எல் நினோ தாக்கம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்களைக் கருத்திற்கொண்டு, விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கும், அவர்களை வலுப்படுத்தி சிறந்த அறுவடையைப் பெற்றுக்கொள்வதற்கும் தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், விவசாய அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வங்கிகளினால் முன்னெடுக்கப்படவுள்ள ஊக்குவிப்பு நடைமுறைகள், விவசாயக் காப்புறுதி, குளங்களை அபிவிருத்தி செய்தல், மண் அகழ்வு, விவசாய வீதி அபிவிருத்தி செய்தல், மற்றும் வாய்க்கால் புனர்நிர்மாணம், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நீர்ப்பாசனத் திட்டங்கள் தொடர்பாகவும், மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
விதை நெல் வழங்கள், பயிர்ச்செய்கைக்கான உரம் வழங்குதல், யானை மனித மோதல்கள், நஷ்டஈடு வழங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவான கலந்துரையாடப்பட்டதுடன் விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான பல முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டது.
மேலும், மாவட்டத்தில் நிலவும் வறட்சி காரணமாக பல குளங்களின் நீர்மட்டம் மிகவும் குறைவடைந்துள்ளமை தொடர்பாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டதுடன், எதிர்வரும் பெரும்போகச் செய்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான நீர் முகாமைத்துவ நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.குறிப்பாக எல்நினோ காலநிலை மாற்றத்தினால் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள சூழல் மாற்றங்கள்,நீரைப்பெற்றுக்கொள்வதற்கான நிலைகள் மற்றும் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.
நீர்பாசன திணைக்களம் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் அவ்றறினால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மை தீமைகள் குறித்தும் எதிர்காலத்தில் நீர்பாசன திணைக்களத்தின் செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுப்பது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
குறிப்பாக முந்தனையாறு திட்டத்தினை முன்கொண்டுசெல்வதற்கு உள்ள தடைகள் குறித்தும் அதனை திட்டமிட்டு செய்வதற்கான நீர்பாசன திணைக்களத்தின் மந்தகதிய செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது விவசாயிகளினால் காரசாரமான கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இந்த கூட்டத்தில் விவசாயிகளுக்கான நெல் விதைப்பு காலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் விதைப்பு காலத்தில் தடையின்று உரத்தினைப்பெற்றுகொள்ளுதல்போன்ற விடயங்கள் இதன்போது ஆராயப்படதுடன் அவற்றிற்கான தீர்வுகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது

