பழைய தேர்தல் முறைமை தொடர்பாக 2017ஆம் ஆண்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்த எதிர்க்கட்சியினர், தற்போது அதே தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு கோருவதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டவுடன் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹா பகுதியில் நேற்று (13) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்துக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டுவதாகக் கூறி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அனுராதபுரத்தில் கூட்டமொன்றை நடத்தியதாகவும், அந்த மேடையில் ஊழல்வாதிகள் எனக் கூறப்படுபவர்கள் ஒன்றிணைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் ராஜபக்ஷர்களுடன் முரண்பட்டிருந்த விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரும் தற்போது மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவிடம் தஞ்சமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவர்களின் அரசியல் கலாசாரம் சந்தர்ப்பவாதமானது என்றும், கடந்த காலங்களில் தமது சுயநல தேவைகளுக்காக அரசியல் செய்தவர்கள் தற்போது மீண்டும் அதே நோக்கத்துக்காக ஒன்றிணைந்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் குற்றம்சாட்டினார்.
மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், 2017ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அமைச்சுப் பதவி வகித்த நல்லாட்சி அரசாங்கத்திலேயே மாகாணசபைத் தேர்தலை நெருக்கடிக்குள்ளாக்கும் சட்டம் உருவாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
முறையற்ற மற்றும் மோசடியான பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்தினால், முறையற்ற அரச நிர்வாகமே உருவாகும் எனக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், தேர்தல் முறைமைக்கு முரண்பாடற்ற வகையில் சட்ட சிக்கலுக்கு தீர்வு காணப்பட்ட பின்னரே தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

