யாழ்ப்பாணத்தில் கடமையாற்றி வரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கண்டி பகுதியில் அமைந்துள்ள வீட்டில் இருந்து வாளும் குண்டும் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, அவரிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், குறித்த அதிகாரியின் கண்டி பகுதியிலுள்ள வீட்டை கண்டி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் சோதனையிட்டபோது, வாளொன்றும் குண்டொன்றும் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் கண்டி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார், சம்பவம் குறித்து வாக்குமூலம் வழங்குமாறு குறித்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகரை அழைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

