நான் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்த போது அர்ச்சுனா அங்கு இருக்கவில்லை எனவும், எனினும் யாழ்ப்பாண மக்கள் என்னிடம் மிகவும் நன்றாகப் பேசினார்கள் எனவும் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த காணி விடுவிப்பு மற்றும் மக்கள் நலன்சார் விடயங்கள் குறித்து கருத்து வெளியிடும் போதே இதனைத் குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததிலிருந்து இதுவரையான காலப்பகுதியில், வடக்கு மற்றும் கிழக்கில் முப்படைகளின் கட்டுப்பாட்டிலிருந்த 64,663 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதில் கடற்படையினரிடமிருந்து 2,706 ஏக்கர் காணிகளும், விமானப்படையினரிடமிருந்து 3,391 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதன் பின்னர், 2024 இறுதிப் பகுதியிலிருந்து 2026 ஜனவரி வரையான காலப்பகுதியில் மட்டும் 692 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும், இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் இதுவரை முப்படைகளின் கட்டுப்பாட்டிலிருந்து 374 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் மேலும் 243 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், வட மாகாணத்தை மட்டும் பொறுத்தமட்டில், இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த 23,850 ஏக்கர் காணிகளில் இதுவரையில் 21,280 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விபரித்தார்.
தனது யாழ்ப்பாண விஜயம் குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், தான் யாழ்ப்பாணத்திற்கு நேரில் விஜயம் செய்திருந்த போது அங்கு அர்ச்சுனா இருக்கவில்லை எனவும், ஆனால் தான் நேரடியாகவே களத்திற்குச் சென்று அங்குள்ள மக்கள், அரச அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் கோவில் குருமார்களைச் சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார்.
அங்குள்ள சாதாரண அடித்தட்டு மக்கள் என்னிடம் மிகவும் சுமுகமாகவும் நன்றாகவுமே பேசினார்கள் எனக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாகவே இந்த மக்கள் நலன்சார் நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

