நுவரெலியா நகரில் உரிமையாளர்களால் கட்டுப்பாடின்றி அவிழ்த்து விடப்படும் மட்டக்குதிரைகளால், பொதுமக்களும் வாகன சாரதிகளும் நாளாந்தம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
நகர்ப்புறங்களில் வளர்க்கப்படும் மட்டக்குதிரைகள் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடப்படுவதால், அவை உணவு தேடி பிரதான நகரைச் சுற்றித் திரிகின்றன. வீதியோரங்களில் உள்ள புற்களை உண்பதுடன், சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளையும் உட்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மட்டக்குதிரைகள் பிரதான வீதிகளிலேயே படுத்து உறங்குவதுடன், சில சந்தர்ப்பங்களில் கூட்டமாக வீதிகளைக் கடப்பதால் வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது.
மட்டக்குதிரைகள் ஒன்றுக்கொன்று சண்டையிடும் சந்தர்ப்பங்களில் அவை வாகனங்கள் மீது மோதுவதால், வாகன சாரதிகள் நிலைதடுமாறி கீழே விழும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.
அதேவேளை, வாகனங்களில் பயணிப்பவர்களையும் நடந்து செல்பவர்களையும் மட்டக்குதிரைகள் துரத்துவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, நுவரெலியாவில் அண்மைக்காலமாக பெய்து வரும் தொடர் மழையால் வீதிகளில் மட்டக்குதிரைகளின் சாணம் மற்றும் சிறுநீர் காரணமாக வழுக்குத்தன்மை அதிகரித்துள்ளதாகவும், இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
மட்டக்குதிரைகளை வளர்ப்போர் தங்களது சொந்த இடங்களில் நகராட்சி அனுமதி பெற்று தொழுவம் அமைத்து அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. பொது இடங்களிலும் முக்கிய வீதிகளிலும் மட்டக்குதிரைகள் சுற்றித் திரிந்தால், அவற்றை பிடித்து பொது ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகராட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டும் நகரில் சுற்றித்திரியும் மட்டக்குதிரைகளின் பிரச்சினைக்கு இதுவரை நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மட்டக்குதிரைகளை சவாரிக்காக பயன்படுத்தி வருமானம் ஈட்டும் உரிமையாளர்கள், சவாரி இல்லாத நேரங்களில் அவற்றை தொழுவங்களில் கட்டி வைத்து முறையாக பராமரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நகரில் மற்றும் பிரதான வீதிகளில் சுற்றித்திரியும் மட்டக்குதிரைகளை பிடித்து பாதுகாப்பான இடத்தில் பராமரிப்பதுடன், அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Source: https://samugammedia.com/horses-invading-the-street-strange-nuisance-in-nuwara-eliya-city-1789463381

