நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்து நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு அவசரமாக மாற்றப்பட்ட கைதிகள் மீது நடத்தப்பட்டு வரும் கொடூரத் தாக்குதல்கள் மற்றும் சித்திரவதைகளைச் சிறை அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கைதிகள் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு அவசரக் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்தக் குழுவினால் விடுக்கப்பட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இந்த அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து வெலிக்கடை சிறைச்சாலை உள்ளிட்ட நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகள், அங்குள்ள சிறை அதிகாரிகளால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்படுவதோடு, பல்வேறு சித்திரவதைகளுக்கும் ஆளாக்கப்பட்டு வருகின்றனர் என்று எமக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.
தடுப்புக்காவலில் உள்ள கைதிகளுக்கு எதிராக இவ்வாறான வன்முறைகளைப் பிரயோகிப்பது அவர்களின் அடிப்படை மனித உரிமைகளை முற்றாக மீறும் செயலாகும். எனவே, இந்த மனிதாபிமானமற்ற கொடூரத் தாக்குதல்களைச் சிறைச்சாலை அதிகாரிகள் எவ்வித தாமதமுமின்றி உடனடியாக நிறுத்த வேண்டும் என எமது குழு பலத்த அதிருப்தியை வெளியிடுவதுடன் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றது.” – என்றுள்ளது.
கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளைக் கையாளும் போது சர்வதேச மனித உரிமைத் தரநிலைகளைப் பின்பற்றி நடக்குமாறும் பொறுப்பு வாய்ந்த அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் கைதிகள் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு இந்த அறிக்கையின் ஊடாக அவசர அழைப்பு விடுத்துள்ளது.

