நாட்டில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புதல் தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasooriya) தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புதல் தொடர்பாக பொதுச் சேவை ஆணையத்துடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக பிரதமர் ஹரிணி குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் 43,273 ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாகவும் மாகாண சபைகளின் கீழ் உள்ள பாடசாலைகளில் 40,621 ஆசிரியர் வெற்றிடங்களும், தேசிய பாடசாலைகளில் 2,652 ஆசிரியர் வெற்றிடங்களும் இருப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆட்சேர்ப்புத் தேர்வு
2019 மே 25 அன்று நடைபெற்ற ஆசிரியர் ஆட்சேர்ப்புத் தேர்வில் தகுதி பெற்ற ஆசிரியர்கள் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து செப்டம்பர் 25, 2024 அன்று பொது சேவை ஆணையத்திடம் அமைச்சகம் முறையாக அறிவுறுத்தல்களைக் கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நியமனங்கள் வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தாலும், ஏப்ரல் 26, 2022 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையைத் தொடர்ந்து கொரோனா காரணமாக இந்த செயல்முறை ஒத்திவைக்கப்பட்டது.
பயிற்சிக் கல்லூரி
இதையடுத்து, இந்த பாடங்களுக்கான வெற்றிடங்கள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் இருந்து பட்டதாரிகளால் நிரப்பப்பட்டது.
இந்தநிலையில், மீதமுள்ள வெற்றிடங்கள் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் இருந்து பட்டம் பெறவிருப்பவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.