எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடவுள்ள
தமிழ் கட்சிகளின் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது இன்று (26) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றுள்ளது.
கலந்துரையாடல்
இந்தக் கட்சிகளின் முதலாவது சந்திப்பு கடந்த 23 ஆம் திகதி யாழ்ப்பாணம் –
இணுவில் பகுதியில் இடம்பெற்றிருந்த நிலையில் இன்று இரண்டாவது சந்திப்பு
இடம்பெற்றுள்ளது.

இன்றைய சந்திப்பில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஜனநாயக போராளிகள் கட்சி, தமிழ்த்
தேசிய கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயக தமிழரசு கட்சி, சமத்துவ கட்சி ஆகிய
8 கட்சிகள் கலந்துகொண்டனர்.
மேற்படி கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் சார்பில் பிரதிநிதிகள்
எவரும் பங்கேற்கவில்லை.
இன்றைய கலந்துரையாடலில்
கலந்துகொண்ட அனைத்து கட்சிகளும் சங்கு சின்னத்தில் போட்டியிடுவதற்கு இணக்கம்
எட்டப்பட்டுள்ளதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
ஆனால் குறித்த கூட்டணியில் இணைந்துகொள்வது குறித்து தமிழ் மக்கள் கூட்டணி
இதுவரை இறுதி முடிவினை எடுக்கவில்லை என சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன்
ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.




