உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் மீதான அத்துமீறல்களை தடுப்பதற்காக விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெறும் அத்துமீறல்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வேலைத்திட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வன்முறைகள், ஒடுக்கு முறைகள், நற்பெயருக்கு களங்கம் விளைவித்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் என்பனவற்றை சமூக ஊடகங்கள் ஊடாக பெண் வேட்பாளர்கள் எதிர்நோக்குகின்றனர்.

இவற்றுக்கு எதிராக சில தரப்பினரின் உதவியுடன் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
”அவளின் பயணத்திற்கு உதவுவோம்” எனும் பெயரில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என கூறியுள்ளார்.

